UDAAN திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 பயிற்சி மையங்களை மட்டுமே ஏற்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, அதிருப்தி அளிப்பதாக பிரதமர் நரேந்திரமோதிக்கு, முதலமைச்சர் கடிதம்
Oct 29 2014 10:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள UDAAN திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 மையங்களை மட்டுமே ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது கடும் அதிருப்தி அளிப்பதாக பிரதமர் திரு.நரேந்திரமோதிக்கு, தமிழக முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழகத்தில் கூடுதலாக பயிற்சி மையத்தை ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை குறைந்தபட்சம் அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் திரு. நரேந்திரமோதிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளில் சேர, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்பாக படிக்கும் ஆயிரம் மாணவிகளை தேர்வு செய்வதற்காக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் புதிதாக UDAAN என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதை தாம் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக பயிற்சி அளிக்கும் மையங்கள் இடம்பெறும் நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 நகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில் மற்ற மாநிலங்களுக்கு அதிக பயிற்சி மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன - கல்வியில் முன்னிலைப் பெற்றுள்ள தமிழகத்தில், ஏராளமானோர் இத்திட்டத்திற்கு தகுதி பெற்றவர்களாவர் - எனவே, மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 151 பயிற்சி மையங்களில் தமிழகத்தில் 2 மையங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது வியப்பளிப்பதாக உள்ளதென்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் - மற்ற மாநிலங்களில் அதிகமான அளவு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன - அறிவியல் கல்வியை கணிசமான எண்ணிக்கையில் மாணவிகள் தமிழகத்தில் பயின்று வரும் தருணத்தில், 2 மையங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது போதுமானதாக இருக்காது என்றும், இது, உயர்கல்வியில் மாணவிகள் பங்கேற்கும் ஆர்வத்தினை குறைத்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் - பயிற்சி மையம் அமைந்துள்ள இடங்களை கருத்தில் கொண்டு பார்க்கும் வேளையில், அதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ய உள்ள தகுதியான மாணவிகளின் ஆர்வத்தையும் இது குறைத்துவிடும் என்பதில் ஐயமில்லை - இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில், பெரிய நகரமாகவும், முன்னணி மாநகரமாகவும் திகழும் சென்னையில், மற்ற மாநகரங்களில் உள்ளது போன்ற பயிற்சி மையம் அமைக்கப்படாதது வியப்புக்குரியதாக உள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தகுதி பெற்ற ஏராளமான மாணவிகள் பங்கேற்கும் வாய்ப்பினை இது இழக்கச் செய்யும் - தகுதியான மாணவிகள் அவர்களது மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்க செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, UDAAN திட்டத்தில் உள்ள குறைபாட்டை ஆராய்ந்து, சரிசெய்து தமிழகத்தில், சென்னையையும் சேர்த்து அதிகப்படியான பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், திரு. ஓ. பன்னீர் செல்வம், மேலும், இத்திட்டத்திற்காக தமிழகத்தில் உள்ள தகுதியான மாணவிகள் விண்ணப்பிக்கும் வகையில், அதற்கான கடைசி நாளினை அடுத்த மாதம் 30-ம் தேதியாக நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.