தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Sep 4 2014 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால், நெல்லை மாவட்ட பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 93.45 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 106.3 அடியாகவும் உயர்ந்துள்ளன. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.5 அடியாகவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அணை ஒன்றரை அடியும், பெருஞ்சாணி அணை இரண்டு அடியும் உயர்ந்துள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பியுள்ளன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.22 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் பகுதியில், 7 சென்டி மீட்டரும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.