வடகிழக்குப் பருவமழை காரணமாக, இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதலாக மழை கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, போர்க்கால அடிப்படையில் செப்பனிடப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து, இந்தப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் பகுதிகளில் கனமழையால் குளங்கள் நிரம்பியுள்ளன. பாபநாசம் சேர்வலாறு, கடனாநதி, குண்டாறு அணைகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆலங்குளம் அருகேயுள்ள ஊத்துமலை கிராமத்தில், குளம் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார், நிவாரணப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில், மாநகராட்சி பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேயர் அந்தோணி கிரேசி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.
கரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 27,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஈரோடு அருகே உள்ள சூரம்பட்டிவலசில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மழையால் நிரம்பி வழியும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலை அடிவாரத்தில் உள்ள பெரும்பள்ளம் அணை 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.
வடகிழக்கு பருவமழையால், நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.