தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் - ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
Oct 27 2014 7:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கன்னியாகுமரி அருகே தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு, மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில், மழைபெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்பட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 10 சென்டி மீட்டரும், நாமக்கல்லில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் பென்னாகரம், பலக்கோடு ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருப்பூர் வடக்கு, பல்லடம், அவினாசி, தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.