வடகிழக்குப் பருவமழை காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில், தொடர்ந்து கனமழை பெய்துவருவதையடுத்து, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, அப்பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் திரு. ஆர். காமராஜ், பொது சுகாதாரம், பொதுப்பணித்துறை, வருவாய்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் பருவமழை பெய்தது. வெளுத்து வாங்கிய பருவமழையால் புல்லாவெளி மலைப்பகுதியில் உள்ள ஜெரோனியம் ஆற்றில் தொங்குபாலம் வரை தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் குடிநீர்தேவையையும், பாசனத்தையும் பூர்த்தி செய்து வரும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைப்படி, கடந்த ஆண்டு 65 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டதால், மழை நீர் வீணாகாமல் அணைக்கு வந்து, அணையின் மொத்த கொள்ளவான 23.5 அடி முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயப்பணிகள் துரிதமடைந்துள்ளதாகவும், அணை சுற்றுலாத்தளம்போல் காட்சி அளிப்பதாகவும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரியசடையம்பாளையத்தில், 5 ஏக்கர் சுற்றளவுள்ள குளம், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் ஆணைப்படி முன் நடவடிக்கையாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு மழை நீர்சேமிப்புக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பெய்த கனமழையால், தற்போது இந்த குளம் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள, கொல்லம்பாளையம், காட்டுப்பாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் உயர்வுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், விழுந்தமாவடி, வேட்டைக்காரவிருப்பு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.