தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு
Jan 23 2020 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பழனிசெட்டப்பட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கில், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் 17 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 2019 செப்டம்பர் 12-ம் தேதி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட ஓ.ராஜா செயல்பட இடைக்காலதடை விதித்தது. மேலும் இவரது தலைமையிலான இடைக்கால நிர்வாகக்குழு செயல்படவும் தடை விதித்தது. தேனி பால் உற்பத்தி மற்றும் பால் வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர் அன்றாட பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த தடையை விலக்க கோரி ஆவின் நிர்வாகம் மனு செய்தது. நீதிபதிகள் திரு.துரைச்சாமி மற்றும் திரு.ரவீந்திரன் அமர்வு இந்த வழக்கை விசாரித்து ஒத்தி வைத்தது. இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ராஜா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விதிப்படி தேர்தடுக்கப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆவின் ஆணையர் விதிகளை பின்பற்றி தற்காலிக மற்றும் நிரந்தர குழுவை அமைப்பது பற்றி முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஓ. பன்னீர் செல்வத்திற்கும், அவரது சகோதரருக்கும் கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.