நாட்டின் 71-வது குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் : மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
Jan 26 2020 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் சார் ஆட்சியர் திரு. சரவணன், மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநேரே தேசிய கோடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. திரு.ஸ்ரீநாத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.கதிரவன் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் கல்வி பொதுசேவை என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படை பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் தோடர் மற்றும் படுகர் மக்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து வந்து கலாச்சார இசைக்கு ஏற்ப நடனம் ஆடினர்.