மோட்டார் வாகன ஆய்வாளர் பணியில் 113 இடங்களுக்கு 33 பேருக்கு மட்டுமே நேர்முகத் தேர்வு - பட்டியலை ரத்து செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jan 28 2020 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு 33 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைத்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வுக்கு, 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு.ஆனந்த் வெங்கடேஷ், நேர்முகத்தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை எனச் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, புதிய விதிகளை வகுப்பதாகவும், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடத்தப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், எழுத்து தேர்வில் பங்கேற்ற ஆயிரத்து 328 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கவும், மோட்டார் வாகன பராமரிப்பு துறைக்கு உத்தரவிட்டார். மோட்டார் வாகன பராமரிப்புத் துறையிடம் அறிக்கை பெற்று, நான்கு வாரங்களில், தகுதியான அனைத்து விண்ணப்பதாரர்களையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.