சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், மதுரை மகபூப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு, அ.ம.மு.க., மார்க்சிஸ்ட் மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரில் ஆதரவு தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்ற பேரணியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அரசு உடனடியாக காவல் துறை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக அங்கு 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள மஜ்ரி அல்ஹாதி பள்ளிவாசலில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், பள்ளிவாசல் தலைவர் இப்ராஹிம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சின்ன பள்ளிவாசல் முன்பு, 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தினர் மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தையை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் பள்ளிவாசல் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூரில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள், மாணவர்கள், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.