தமிழகத்தில் அனைத்து தேர்வுகளிலும் முறைகேடுகள் நடப்பது கேலிக்கூத்தாக உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை - சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கவும் உத்தரவு
Feb 20 2020 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய, தேர்வின் நடைமுறைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 8 ஆயிரத்து 888 பணியாளர்களை தேர்வு செய்யும் அறிவிப்பாணையை கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, கடந்த 2-ம் தேதி தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் பயின்றதாகவும், இதில் பலர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்றும், இந்த முறைகேடுகளால் தேர்வுகள் மீது இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். பின்பு 8 ஆயிரத்து 888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில், டிஜிபி மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.