சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேச்சு
Feb 20 2020 9:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிவற்றுக்கு அனைத்து தரப்பு மக்களும் எதிராக உள்ளனர் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் திருமதி பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, சென்னை
வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை சந்தித்த திருமதி பிருந்தா காரத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த சட்டத்தை இயற்றியதன் மூலம் பிரதமர் திரு.மோதி, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா ஆகியோர், அடிப்படை அரசியலமைப்பு சட்டத்தையே தகர்த்தெறியும் வேலையை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த சட்டங்களால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என கூறுவதன் மூலம், தனது புத்தியை இ.பி.எஸ். கடன்கொடுத்துள்ளாரா? என கேள்வி எழுப்பினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், அனைத்து ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். ஹிட்லரை பின்பற்றி, மத்திய பா.ஜ.க அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். மக்கள் விரோத பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைவரும் கரம்கோர்த்து போராட வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் திரு.பழ.நெடுமாறன் தெரிவித்தார்.