அவிநாசி விபத்தில் பலியான 19 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப்பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பு வைப்பு - உயிரிழந்தவர்களின் உறவினர்களை கேரள அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்
Feb 20 2020 9:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அவினாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 19 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கேரள அமைச்சர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும், அவினாசி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, உடல்கள் அனைத்தும் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
விபத்து குறித்து அறிந்தவுடன், கேரள எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டனர். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை கேரள மாநில வேளாண்மை துறை அமைச்சர் திரு.சுனில் குமார் பார்வையிட்டார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, அ.ம.மு.க திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.சிட்டிசன் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனிடையே, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் ஈரோடு அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு.விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.