தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் 2-ம் தேதி தொடக்கம் : தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை
Feb 28 2020 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் 2ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணாக்கர்கள் எழுதவுள்ளனர். இதற்காக 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைகளில் உள்ள 62 கைதிகள் தேர்வு எழுத புழல் சிறைச்சாலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூவாயிரத்து 330 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும்.
தேர்வையொட்டி, 296 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்தில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கீனத்திற்கு துணை போகும் தேர்வு மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களை தெரிவிக்க ஏதுவாக தேர்வு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு, புகார்களை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.