தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காய்கறி சந்தைகளாக மாறும் பேருந்து நிலையங்கள் - சந்தைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு
Mar 28 2020 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் இயங்கி வந்த உழவர் சந்தைகள் பொதுமக்களின் நலன் கருதி விசாலமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், சூரமங்கலம் பகுதியில் இயங்கிவந்த காய்கறி சந்தைகள் சேலம் மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு இன்று விற்பனை தொடங்கியது. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து தங்களுக்கு தேவையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காய்கறி சந்தைகளில் காய்கறிகளின் விலை குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. விஜய கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள காய்கறி சந்தையில் வியாபாரிகள் அதிக விலையில் காய்கறிகளை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. அதேவேளையில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.