வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தமிழகம் வரும் அனைவருக்கும் பி.சி.ஆர் சோதனை கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
Jun 2 2020 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த, விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகத்துக்கு வரும் அனைவருக்கும் பி.சி.ஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் 7 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்று திரும்புவோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் விமானநிலையங்களில் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்திற்குள்ளே பயணிக்கவும் தமிழக அரசின் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.