மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறிய திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை - வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல சிரமம் ஏற்படுவதாக, விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை
Jun 5 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமழிசை பகுதியில் பெய்த திடீர் மழையினால், அங்கு செயல்பட்டு வரும் தற்காலிக சந்தை, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. காய்கறிகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க போதிய வசதிகள் இல்லை என்றும், வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, சென்னை அருகே உள்ள திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும், மொத்த வியாபாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காய்கறிகளை சேமித்து வைக்க வசதி இல்லாததால், விற்பனையாகாத காய்கறிகளை, வியாபாரிகள் மூட்டை மூட்டையாக, கீழே கொட்டும் நிலை இருந்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக, நேற்று திருமழிசை பகுதியில் பெய்த மழையால், திருமழிசை சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கி நகர முடியாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. சிறிய மழைக்கே திருமழிசை சந்தை தாங்காத நிலையில், கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.