7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
Jun 17 2020 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
7 வயது சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரித்திகேஷ்வரன், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், தன் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தது. தொட்டில் கட்டப்பட்டிருந்த கொக்கி கம்பி கீழே விழுந்து, சிறுவன் ரித்திகேஷ்வரனின் கழுத்து பகுதியில் குத்தி, வலது காது வழியாக வெளியே வந்தது. ரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் சிறுவன் உயிருக்கு போராடினான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவில் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், சிறுவனின் கழுத்து பகுதியில் குத்திய கம்பி 12 மில்லி மீட்டர் அகலமும், 2 அடி நீளமும் கொண்டது எனத் தெரியவந்தது.
கோவை மருத்துவமனை டீன் டாக்டர் காளிதாஸ் அறிவுறுத்தல்படி, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரங்கராஜன் தலைமையில், மருத்துவர்கள் திரு. தர்மேந்திரா, திரு. முத்துராமலிங்கம், திரு. செந்தில்குமார், திரு. சீனிவாசன் மற்றும் மயக்கவியல் துறைத் தலைவர் திரு. ஜெய்சங்கர் நாராயணன், வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சிறுவன் ரித்திகேஷ்வரனின் உடல்நிலை தேறி வருகிறது. ஆபத்தான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்கள் குழுவினரை கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் காளிதாஸ் வெகுவாகப் பாராட்டினார்.