நிலத்தகராரில் ரியல் எஸ்டேட் அதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் - தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கைது
Jul 12 2020 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்போரூர் பகுதியில் நிலத்தகராறின்போது ரியல் எஸ்டேட் பிரமுகர் மீது துப்பாக்கிசூடு நடத்திய புகாரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் இவருக்கு சொந்தமான இடத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்பொழுது அங்கு மணல் கொள்ளை நடந்துள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மீண்டும் தனக்கு சொந்தமான இடத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த திருப்போரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் மற்றும் அவருடைய உறவினர் வசந்த் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், குமார் வந்த காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் இதயவர்மனின் தந்தையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மோதல் நடைபெற்ற இடத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இதயவர்மனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவரிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.