சுதந்திர தினவிழா நாளைகொண்டாடப்படுவதையொட்டி தீவிர சோதனை - தமிழகத்தில் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
Aug 14 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழகத்தில் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் அதிநவீன ரோந்து படகுகள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல், தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளம் செல்லும் பாதைகளில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நடைமேடை பார்சல் வைக்கும் அறை, பயணிகள் தங்கும் அறை என, அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாள பகுதிகளில், ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். ரயில் நிலைய பணியாளர்கள், தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையிலும் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே இருப்பு பாதை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சரக்கு ரயில்களில் வந்த சரக்குகளை, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர்.