மழையின் தீவிரத்தால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மேலும் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Sep 21 2020 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலி குண்டுலுவை வந்தடைந்தது. தற்போது நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான அணைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல், பீச்சனஹள்ளியில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் ஏற்கனவே முழுகொள்ளளவை எட்டி நிரம்பி விட்டன. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான பிலி குண்டுலுவை வந்தடைந்தது. நீர்வரத்து தற்போதைய நிலையில் விநாடிக்கு சுமார் 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.