அதிமுக-வில் புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடை விதிக்கக்கோரி வழக்கு - பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடத்த கோரிக்கை
Sep 21 2020 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அவிலிப்பட்டி சேர்ந்த வழக்கறிஞர் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படாமல், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர் வேட்பாளர் குறித்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், புதிய பொதுச்செயலாளர் பதவி உட்பட நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.