வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம் எதிரொலி - நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Dec 1 2020 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயல் சின்னமாக உருவெடுக்கும் நிலையில், குளைச்சல் தொடங்கி, பாம்பன், நாகை, கடலூர் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது விரைவில் புயல் சின்னமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கன்னியாகுமரிக்கு கிழக்கே சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயலால் நாளை மற்றும் நாளை மறுநாள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொடங்கி பாம்பன், நாகை, கடலூர் உட்பட 11 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.