தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது - பிற மாவட்டங்களிலும் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்கள்
Jan 20 2021 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் மாதங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி மொத்தம் 30 லட்சத்து 68 ஆயிரத்து 713 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் உரிய முறையில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. திருத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வாக்காளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட்டார்.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். வாக்காளர் இறுதிப் பட்டியலில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 246 மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சோழங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேர் நீக்கப்பட்டுள்ளனர். புதிதாக 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள், முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 18 முதல் 19 வயதைச் சேர்ந்த 4 லட்சத்து 80 ஆயிரத்து 953 ஆண்களும், 4 லட்சத்து 16 ஆயிரத்து 423 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 318 பேரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வாக்காளர் இறுதிப் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் 47 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.