சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு - கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதால் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிக்கை
Jan 20 2021 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், காவல்துறை அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப்பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஹேமநாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடயமோ அவரது கழுத்தில் இல்லை என, அவரது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தேகம் எழுப்பினார். ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹேம்நாத்தின் ஜாமின் வழக்கில் இடையீட்டு மனுதாரரக அவரது நண்பர் சையதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.