கோவையில் பேருந்து பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுட்ட நபர்கள் - சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டிப் பிடித்த காவலர்
Jan 25 2021 7:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை அன்னூர் போலீசார் துரத்தி பிடித்து கைது செய்த காட்சிகள் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் செல்போன்கள் திடீரென காணாமல் போவதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த இருவரும் தப்பி ஓடினர். தப்பியோடிய நபரை துரத்திச் சென்ற தலைமை காவலர் மணிகண்டன் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிலையிலும் திருடனை காவலர் பிடித்தார். மற்றொரு நபரையும் துரத்திப் பிடித்து, அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், சேக்தாவூத் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். கொள்ளையர்களை காவலர்கள் விரட்டிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.