இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மரியாதைக்குரிய தோழர் திரு.தா. பாண்டியன் மறைவுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தா. பாண்டியன் முன்வைத்த கொள்கை - கோட்பாடுகள் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மரியாதைக்குரிய தோழர் திரு. தா. பாண்டியனின் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்றும், இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் இழப்பு ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய திரு. தா. பாண்டியன், தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராவார் - தோழர்கள் ஜீவானந்தம், மோஹித் சென், கே.டி.கே. தங்கமணி, கல்யாணசுந்தரம், சங்கரைய்யா, நல்லகண்ணு போன்றவர்களின் பொதுவுடைமை பாசறையில் பயணித்த நீண்ட நெடிய அரசியல் பயணம் அவருடையது என சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மரியாதைக்குரிய திரு. தா. பாண்டியன், இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராளுமன்றத்திலும் தன் பங்களிப்பை செவ்வனே செய்துள்ளார் - மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் - அவர் முன்வைத்த கொள்கை கோட்பாடுகள் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மாவுடன் அவர் காட்டிய நேசம் என்றும் மறக்க முடியாதது - அவை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதியப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ள சின்னம்மா, திரு. தா. பாண்டியன் தம்மிடம், தன் தந்தையைப் போன்று தன் மீது மிகவும் பரிவு காட்டியவர் என்றும், அவரை இழந்தது, தன் தந்தையை மீண்டும் இழந்ததாக நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றை நான் நினைவு கூற கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சின்னம்மா, தமது உடல்நிலை முற்றிலும் குணமடைந்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் தம்மை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்துள்ளார். தமது அரசியல் பயணத்தில் வெற்றியடைய வாழ்த்து கூறியது இன்றும் தமது காதில் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தோழர் தா. பாண்டியனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியைச் சார்ந்த தோழர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், தா. பாண்டியனின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தியாகத்தலைவி சின்னம்மா இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.