ஊதியஉயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக, பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெரம்பலூர் அரசு போக்குவரத்து பணிமனையில், 10 பேருந்துகள் மட்டுமே இதுவரை இயக்கப்பட்டுள்ளன. முக்கிய வழித்தடங்களை தவிர, மற்ற பகுதிகளில் குறைந்தளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். துறைமங்கலம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு, 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் புதிய பேருந்து நிலையம், அரசு பேருந்து பணிமனை, ராமகிருஷ்ணா பார்க் பணிமனை, அஸ்தம்பட்டி, எருமாபாளையம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி நகர பணிமனை முன்பு, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு. பிரகாசம் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுபவமில்லாத ஓட்டுனர், நடத்துனர்களை வைத்து பேருந்துகளை இயக்கக் கூடாது என அப்போது வலியுறுத்தப்பட்டது.