தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் - ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பில் ஈடுபடும் துணை ராணுவப் படையினர்
Mar 1 2021 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டபேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு 5 கம்பெனியை சேர்ந்த 500 துணை ராணுவப்படை வீரர்கள் சிறப்பு ரயில் மூலம் ஈரோடு வந்தடைந்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் துணை ராணுவப்படை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 5 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஈரோடு சென்றடைந்தனர். இவர்கள் அங்கிருந்து திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளனர். ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவத்தினர் தற்போது பாரியூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை கமாண்டோ தலைமையில் 90 வீரர்கள் மணிப்பூரில் இருந்து நாகர்கோவில் வந்து சேர்ந்தனர். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு படை வீரர்கள் தேர்தல் பணிக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். மாவட்டம் முழுவதும் வாகன சோதனை பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.