கொரோனா நெருக்கடி நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகள் இல்லை - மத்திய, மாநில அரசுகள் மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Apr 21 2021 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா நெருக்கடி நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகள் உள்ளிட்டவை இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களே அலட்சியம் காட்டாதீர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருவதாகவும், பாதிப்பில் இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசிகள் உள்ளிட்டவை இல்லை என்று கூறியுள்ளார். ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆட்சியாளர்கள், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கரிசனம் காட்டுவது ஏற்புடையதல்ல என்றும், தேர்தல் முடிவை எதிர்பார்த்து தமிழக அரசு முடங்கிக்கிடக்கிறதோ என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தெளிவான திட்டமிடலுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றும், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும் என்றும் திரு. கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.