பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
Apr 21 2021 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெண் எஸ்.பி.க்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், சி.பி.சி.ஐ.டி விசாரணை முறையாக இருக்காது என, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி, ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி. திரு.கே.ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எஸ்.பி. அளித்த புகாரில், உட்புகார் விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. உட்புகார் விசாரணைக்குழு மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணைகளுக்கு நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இதே விவகாரத்தை தனி நீதிபதி கண்காணித்து வருவதால், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தது.