கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கோடை மழை - இரணியலில் 28 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவு
May 14 2021 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்ததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 28 சென்ட்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி வருவதால் நாளை மறுநாள் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பிற்பகல் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்ததால், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இரணியல் பகுதியில் 280 மில்லிமீட்டர் மழையும், குருந்தன்கோடு பகுதியில் 121 மில்லிமீட்டர் மழையும், கோழிப்போர்விளை பகுதியில் 115 மில்லிமீட்டர் மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரபி கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு தகவல் கிடைக்காததால், அவர்களை தொடர்பு கொள்ள, மீனவ அமைப்புகளும், மீன்வள துறையினரும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.