தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிடும் முதலமைச்சர் - ஒரு வாரமாக தண்ணீர் தேங்கிய பகுதியில் அவசர கதியில் வெளியேற்றப்படும் மழைநீர்
Dec 2 2021 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிடும் நிலையில், ஒருவார காலமாக தேங்கியிருந்த தண்ணீரை, அவசர கதியில் அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடியில் மழை கொட்டித்தீர்த்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் விடுபடாத நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில் மழைநீர் குளம்போல் தேங்கிய போதிலும், அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் வருகைக்காக, அதிகாரிகள் அவசர அவசரமாக புதிய குழாய்களை அமைத்து, மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படும்போது வேடிக்கை பார்த்த அதிகாரிகள், முதல்வருக்காக பணிகளை துரிதப்படுத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.