அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : அ.தி.மு.க. - தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம் - நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன
Jan 21 2022 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, தி.மு.க.வினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கவுன்சிலர்கள் நாற்காலிகளை வீசியெறிந்தனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருமதி. ரெஜினா நாயகம் தலைவராகவும், அவரது கணவரும் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளரான திரு. யாகப்பன் துணைத்தலைவராகவும் வெற்றிபெற்றனர். இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் 4 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால், ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத் மீது தி.மு.க கவுன்சிலர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இதுதொடர்பான வாக்கெடுப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. காசிசெல்வி, வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் நடைபெற்றது. அதிமுக.வைச் சேர்ந்த ரெஜினா நாயகத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும், திமுக-வினருக்கு ஆதரவாக 14 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். குறைந்தபட்சம் 16 கவுன்சிலர்களாவது இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக, வாக்களிக்க வேண்டும் என்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது். இதனால் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலியை எடுத்து வீசினர்.
தலைவர் மற்றும் துணைத் தலைவருக்க எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்குப்பெட்டியை எடுத்துச் சென்ற அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வாக்குப்பதிவை நடத்தியும், முடிவை அறிவிக்காமல் திமுகவினருக்கு சாதகமாக அராஜகப்போக்குடன் பெட்டியை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக அ.தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்தனர்.