தூத்துக்குடி மலர் சந்தையில் மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு
Aug 5 2022 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரலட்சுமி நோன்பு மற்றும் மாதா கோயில் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மலர் சந்தையில் மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள மலர் சந்தைக்கு தெய்வச்செயல்புரம், பேரூரணி, ஒட்டப்பிடாரம், செட்டிகுளம் போன்ற பகுதிகளிலிருந்தும், மதுரை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாதா கோயில் திருவிழா நடைபெற்று வருவதாலும், ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதாலும் பூக்கள் மற்றும் பூ மாலைகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ற அளவு பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ தற்போது ஆயிரத்து 200 ரூபாய் வரையிலும், பிச்சிப்பூ 400 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கனகாம்பரம் பூ ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது தேவைக்கேற்ப பூக்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.