ஈரோடு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் நின்ற காட்டு யானை : சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Sep 23 2022 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான காரப்பளம் சோதனைச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை குட்டியுடன் நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், திம்பம் மலைப்பாதை வழியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. உள்ளூர் வாகனங்களும் இரவு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் யானைகள் சாலையில் உலா வருவது வழக்கமாகி வருகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு காரப்பள்ளம் சோதனை சாவடியின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை குட்டியுடன் உலா வந்தது. இதனால் கரும்பு ஏற்றிச்சென்ற லாரிகள் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்தன. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக சாலையில் நின்ற யானைகள் பின்னர் காட்டுக்குள் சென்றன. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நின்றால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.