நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
Apr 27 2017 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மாவட்டத்திற்குட்பட்ட நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிந்து வரும் செய்தியாளர்கள், புகைப்படம் எடுப்பவர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் திருமதி. மு. ஆசியா மரியம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், எலும்பு முறிவு, ஈ.சி.ஜி. ஸ்கேன், எக்கோ மற்றும் இதய பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் சித்த மருத்துவத்துறையின் சார்பில் மூலிகைக் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.