மாங்கனி சாகுபடிக்கு பெயர்போன சேலத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை செய்யும் முறை அறிமுகம் : வாடிக்கையாளர்கள் வீடு தேடி மாங்கனி கிடைப்பதால் பெரும் வரவேற்பு
Apr 28 2017 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாங்கனி சாகுபடிக்கு பெயர்போன சேலத்தில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதனை விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள், தாங்கள் இருக்கும் பகுதியிலிருந்தே நேரடியாக மாங்கனி விற்பனையில் ஈடுபட முடிகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி மாங்கனி கிடைப்பதால், இதற்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மாங்கனி விளைச்சலுக்கு மிகவும் பெயர்போன பகுதிகளில் சேலத்திற்கே முதலிடம். நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் சாப்பிடத் தூண்டும் தன்மை கொண்டவையாக சேலத்து மாங்கனிகள் விளங்குகின்றன.
அம்மாவட்டத்தின் மண்வளம் காரணமாக கூடுதல் மணமும், சுவையும் கொண்டதுமாக திகழ்வதால் அங்கு விளையும் மாங்கனிகள், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன. சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இங்கு மாங்கனி சாகுபடி செய்யப்படுகிறது. 60 வகையான மாங்கனிகள் விளைகின்ற போதிலும், பெங்களூரா, இமாம்பசந்த், மல்கோவா, அல்போன்ஸா போன்ற ரகங்கள் அனைவரும் விரும்பக்கூடியவையாக உள்ளன. தமிழகத்தின் பல்வேறு சந்தைகளிலும் கிடைக்கும் சேலத்து மாங்கனிகள் தற்போது முதன்முறையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. காலத்திற்கேற்ற இந்த முயற்சியால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மாங்கனிகளை தங்கள் பகுதிகளில் இருந்தபடியே விற்பனை செய்ய முடிகிறது. அதேபோல், வாடிக்கையாளர்களுக்கும் வீடு தேடி மாங்கனி கிடைப்பதால் இதனை அவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.