அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற டெங்கு ஆலோசனை கூட்டத்தில் செல்போனில் கேம்ஸ் விளையாடிய அதிகாரிகள், மருத்துவர்கள் - ஆட்சியாளர்களின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம்
Oct 16 2017 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் நடைபெற்ற டெங்கு நோய் தொடர்பான அதி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அரசு மருத்துவர்களும், அதிகாரிகளும் தங்கள் செல்போன்களில் கேம்ஸ் விளையாடியும், வாட்ஸ்அப் தகவல்களை பரிமாறியும் அலட்சியமாக இருந்தனர். நகைப்புக்கிடமான அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்திலேயே இந்த ஒழுங்கீன செயல்கள் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், டெங்குவைப் பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை அழித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. நகைப்புக்கிடமான அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய், காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, மூத்த மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடமையை மறந்து கூட்டத்தின் முக்கியத்துவத்தை அலட்சியம் செய்யும் வகையில், தங்களது செல்போன்களில் கேம்ஸ் விளையாடியும், வாட்ஸ்அப் தகவலை பரிமாறியும் நேரத்தை வீணடித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான பல்வேறு முக்கிய தகவல் குறித்து பேசியது எதுவுமே இவர்கள் காதில் கேட்கவில்லை. தமிழகமே டெங்கு பீதியில் உறைந்திருக்கும் போதிலும், அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இவர்கள் நடந்துகொண்ட விதம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.