கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
May 18 2018 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு அரசியல் சட்டத்தை மிதித்து குழி தோண்டி புதைக்கிற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகவில் பெரும்பான்மை இல்லாமால் ஆட்சி அமைத்திருக்கும் பாரதியா ஜனதா கட்சியை கண்டித்தும், அதற்கு வழி வகுத்து கொடுத்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்தும் மதுரை அண்ணா நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர் உட்பட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. திருநாவுக்கரசர், கர்நாட்காவில் பா.ஜ.க., மற்ற கட்சிகளை உடைக்க முயற்சி எடுத்து வருவதா குற்றம்சாட்டினார். இதற்காக பல கோடி ரூபாய் வரை புரள்வதாக தெரிவித்த அவர், ஆட்சியை நடத்த குதிரை பேரத்தில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும், அதற்கு ஆளுநர் துணைபோவதாகவும் புகார் கூறினார்.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ராஜீவ் காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக ஆளுநர் தனது முடிவை திரும்ப பெறாவிட்டால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் என அவர்கள் எச்சரித்தனர்.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், அமைச்சருமான திரு. நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டு, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.