ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையை நினைவுகூறும் இலங்கை இறுதிப்போரின் 9வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தஞ்சை முள்ளிவாய்க்காய் நினைவு முற்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகு வர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
உலக வரலாற்றில் ரத்தகறைகளாலும், துப்பாக்கித் தோட்டாக்களாலும் அத்தியாயங்களாக எழுதப்பட்டது, இலங்கை இனப்படுகொலை. செந்தமிழர் ரத்தத்தை இலங்கையின் ராணுவ கழுகுகள் கொத்தி சுவைபார்த்த சுவடுகள் இன்னும் சிவந்துகிடக்கின்றன.
உலகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் இலங்கை தமிழினப் படுகொலை, உலக வரலாற்றில் என்றென்றும் கருப்பு கறையாய் நீக்கமற நிறைந்திருக்கும்... சோகம்தாங்கியாய் நிலைத்துநிற்கும்.
கரு தாங்கிய தாயின் அருகாமையே கல்லறையாய் மாறிப்போனது கைக்குழந்தைகளுக்கு... உயிரா? மானமா? என்ற உரக்க குரல் எழுப்பினால், மானம்தான் உயர்ந்தது என, அதைவிட உரக்கக்குரல் எழுப்பி உயிர்நீப்பர் தமிழச்சிகள்... மானத்தையும் பறித்து, உயிரையும் குடித்த சிங்கள ராணுவத்தினரின் வெறிக்கு, எத்தனை தமிழச்சிகள் உயிர்பலி தரவேண்டியிருந்தது. ஐ.நா.வின் அறிவுரையை மீறி போர் தருமத்தையும் கடந்து, மருத்துவமனைகள், குடியிருப்புகள், பொதுமக்களின் வசிப்பிடங்கள் என எதையும் விட்டுவைக்காமல் குண்டுமழை பொழிந்து தனது குரோதத்தை வெளிக்காட்டிய இலங்கை அரசு, நிச்சயமாக ஒரு போர்க்குற்றவாளிதான்....
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது, கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட தமிழினத்திற்காக, அந்த ஆறாத ரணத்தை, நினைவுகளில் தேக்கிவைத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் தஞ்சையின் முள்ளிவாய்க்கால் முற்றம்...
ம.நடராசன் எனும் ஒரு மகத்தான தமிழன் மனதில் எழுந்த ஆழமான சிந்தனையின் அடையாள வடிவம்தான் இது... இந்தி எதிர்ப்பு போராட்ட தளகர்த்தர் ம.நடராசன், இந்த நினைவு முற்றத்திற்காக தனது சொந்த நிலத்தை வழங்கினார்.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலையை நினைவுகூறும் இலங்கை இறுதிப்போரின் 9வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தஞ்சை முள்ளிவாய்க்காய் நினைவு முற்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெழுகு வர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் திரு.பழநெடுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கை அரசும், மத்திய அரசும் ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்தது. அதற்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டும் என திரு.பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் 9வது ஆண்டு நிறைவையொட்டி, தமிழர் நலம் பேரியக்கம் மற்றும் தமிழர் ஒன்றுகூடல் நினைவேந்தல் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தை படகு வடிவில் அமைத்து அதனை ராமேஸ்வரம் கடலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி சுடர் விளக்கேந்தி கடலில் விட்டனர். பின்னர் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் தங்கள் செல்ஃபோன்களில் இருந்த விளக்குகளை வானத்தை நோக்கி அசைத்து நூதன முறையில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த ஈழ தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.