நாகை மாவட்டத்தில் கல்லூரி முன் களைகட்டும் கள்ளச்சாராயம் விற்பனை : சிறுவர்களை, கள்ளச்சாராய விற்பனைக்கு பயன்படுத்தும் அவலம்
May 20 2018 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம், தனியார் கல்லூரி முன்பு சிறுவர்களைக் கொண்டு கள்ளசாராயம் விற்பனை செய்யும் அவலம் நடந்தேறி வருகிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்கள் இருந்தும், கண்டுகொள்ளாமல் காவல்துறை அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் பாப்பா கோவில் கிராமத்தைச் சேர்ந்த தேவா என்பவர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து பாப்பாகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார். 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பாக்கெட் சாராயம் பாப்பாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர் ஐசக் நீயூட்டன் தனியார் கல்லூரிக்கு மிக அருகிலேயே சாராய விற்பனை நடைபெறுவதால், கல்லூரி மாணவர்கள் எரிசாராயத்தை குடித்து சீரழிவதுடன், அங்கேயே குடித்துவிட்டு மோதிக்கொள்ளும் நிலையும் ஏற்படுவதாக உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சாராய விற்பனைக்கு சிறுவர்களை பயன்படுத்துவது மட்டுமில்லாமல், சாராய பாக்கெட் போடும் வேலைக்கு சிறு பெண் குழந்தைகளை பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
நாகை நகர காவல்நிலையம், வெளிப்பாளையம் உள்ளிட்ட காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக வீடியோவில் ஒப்புக்கொள்ளும் கள்ளசாராய கும்பல், மதுவிலக்கு பிரிவு காவலர்கள் யாரேனும் வந்தால் சாராயம் விற்ற பணத்தை பிடுங்கி சென்று விடுவார்கள் என்றும் கூறுகின்றனர். காரைக்காலில் இருந்து நள்ளிரவில் இருசக்கர வாகனம் மூலம் 15க்கும் மேற்பட்ட சிறுவர்களை வைத்து கடத்தலில் ஈடுபடும் காட்சிகள் காவல்துறையின் கண்காணிப்பு கேமாரக்களில் பதிவாகியிருந்தும், அதனை கண்டுகொள்ளாமல் காவல்துறை அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் முகசுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.