தமிழகத்தில், மாநில உரிமைகளில் தலையிடும் வகையில் ஆய்வு நடத்தி வரும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில், சாலை மறியலில் ஈடுபடுவதாகக் கூறி, தி.மு.க.வினர், அரங்கேற்றிய நாடகம், பொதுமக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.
மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை உருவாக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் நேற்று தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்தியபோது, அவரை, போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, மதுரை பெரியார் பேருந்துநிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர். அதன்படி போராட்டம் நடத்தவந்த தி.மு.க.வினர் சாலையின் நடுவே மறியலில் ஈடுபடாமல், சாலையின் ஓரத்தில் உள்ள நிழலில் அமர்ந்து கொண்டனர்.
சாலையோரத்தில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், தங்களை கைது செய்யுமாறு அவர்கள் காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு போலீசார் மறுத்ததாக கூறப்படும் நிலையில், அவர்களாகவே வாகனத்தில் ஏறிச்சென்றது கேலிக்கூத்தாக அமைந்தது.
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக, சாலை மறியலின்போது பேட்டியளித்த தி.மு.க. மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி, தமிழக ஆளுநரின் பெயரே தெரியாமல் திணறியதோடு, அருகில் உள்ளவர்களிடம் ஆளுநரின் பெயரைக் கேட்டார். அவர்களுக்கும் தெரியாததால், ஆளுநரின் பெயரை பன்வாரிலால் புரோஹித் என்பதற்குப் பதிலாக குர்ஜித் என காமடி செய்தது, அனைவரிடையேயும் நகைப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
எதற்காக போராட்டம் நடத்துகிறோம், யாரைக் கண்டித்து போராடுகிறோம் என்பது கூட தெரியாமல் தி.மு.க.வினர் நடத்திய இந்த நாடகம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், நகைப்பை உண்டாக்கும் வகையில் இருந்தது.