திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து அங்கிருந்த 3 பேரை இரும்புக் கம்பியால் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்
Jul 14 2018 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் அருகே, ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டில் உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது போல் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன், வெளியே வந்து பார்த்தபோது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை முகமூடிக் கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் அவர் ரத்தம் சொட்டிய நிலையில் தடுமாறி கீழே விழந்தார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் கோகுல் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும், கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். இதில் கோகுல் படுகாயமடைந்தார். முகமூடிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மூவரும் கூச்சலிடவே, நகை மற்றும் பணத்துடன் கொள்ளையர்கள் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்த செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் மீண்டும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு வீட்டு கதவை திறக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர். முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.