கஜா புயல் தாக்குதலால் தஞ்சை, நாகை மற்றும் நெல்லை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம்
Nov 16 2018 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் தாக்குதலால் தஞ்சை, நாகை மற்றும் நெல்லை மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன.
கஜா புயலின்போது சூறைக்காற்று வீசியதுடன் கன மழையும் கொட்டியது. இந்த புயலால் கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழி, வளையப்பேட்டை மற்றும் மாங்குடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
மேலும் நெல் வயல்களும் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள பாலவெளி கிராமத்தில் 10 ஏக்கருக்கும் அதிகமாக, விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். கஜா புயல் காரணமாக நேற்று நள்ளிரவு வீசிய சூறைக்காற்றிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பொங்கல் அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், வாழை மரங்கள் சேதமடைந்துள்ளாதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, சேதமடைந்த மரங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரண உதவி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.