நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுகிறது பழங்கால சத்திரம் : தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தொல்லியல்துறை தகவல்
Sep 22 2019 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் ஒரத்த நாட்டில் அமைந்துள்ள முத்தம்மாள் சத்திரம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட உள்ளதென தமிழக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள், கி.பி.1743 முதல் 1837 வரை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை பல சத்திரங்களை அமைத்தனர். இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம், முத்தம்மாள் என்பவரின் நினைவாக 1800ம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது என மராட்டிய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. காசியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் யாத்ரீகர்களுக்குத் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்த சத்திரம் இருந்துள்ளது. அழகிய தோற்றத்துடன், யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும் ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும் என பழமை மாறாமல் இச்சத்திரம் உள்ளது. இந்த சத்திரத்தை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முத்தம்மாள் சத்திரத்தை தொல்லியல் துறையினர் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முத்தம்மாள் சத்திரத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும், விரைவில் இந்த சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படலாம் என்றும் தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.