சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் - தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Sep 22 2019 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 18ம் தேதி சென்னை நகரில் ஒரே நாளில் 10 சென்டி மீட்டர் வரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை வடிகால் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால், வெள்ள நீர் சாலையில் தேங்கியது. குறிப்பாக வட சென்னையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து இதமான வானிலை நிலவி சில இடங்களில் கனமழை பெய்தது. நங்கநல்லூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மீண்டும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. ஈக்காட்டுத்தாங்கலில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் விருதுநகரில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 6 செ.மீ மழையும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.