கண்டலேறு அணையிலிருந்து இன்று அல்லது நாளையோ தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்
Sep 23 2019 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, இன்றோ அல்லது நாளையோ தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும் கிருஷ்ணா நதியில் இருந்து 12 டி.எம்.சி. நீரை தருவதாக ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை திறக்கப்பட வேண்டிய 4 டி.எம்.சி.க்கு பதிலாக 1 புள்ளி இரண்டு ஐந்து டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. போதிய நீர் இருப்பு இல்லாததால் கண்டலேறு அணையிலிருந்து கடந்த ஜூலையிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது அங்கு பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கண்டலேறு அணையில் 11 டி.எம்.சிக்கும் அதிகமாக நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உள்ளது. இந்த நிலையில், கண்டலேறுவிலிருந்து தண்ணீர் திறக்க ஆந்திர அரசிடம், தமிழக அரசு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, இன்றோ அல்லது நாளையோ கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், சாய் கங்கா கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த ஜீரோ பாயிண்ட்க்கு ஒரு வாரத்துக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.