வெளி மாநிலங்களிலிருந்து அரசே வெங்காயத்தை வாங்க முடிவு : வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை
Sep 23 2019 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெங்காயத்தின் விலை அடுத்த 3 நாட்களில் குறையும் என்றும், வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெங்காயம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் வெங்காயம் உற்பத்தி வெகுவாகக் குறைந்தது. இதனால் கடந்த ஒரு வார காலமாக வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் வரை விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரவிருப்பதையடுத்து, வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் திரு.காமராஜ், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜூ மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் வெங்காய விலையை குறைக்க மற்ற மாநிலங்களில் இருந்து அரசே வெங்காயத்தை வாங்கி குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களில் வெங்காய விலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.