ராஜீவ் காந்தி மரணம் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு : நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார்
Oct 15 2019 7:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜீவ் காந்தி மரணத்தை விமர்சித்துப் பேசியதாக எழுந்துள்ள புகாரில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபாளர் திரு.சீமானை கைது செய்ய வலியுறுத்தி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விக்ரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான் ராஜீவ் காந்தி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாவட்டங்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கோரியும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று சீமான் மீதும், அவரது இயக்கத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும், ராஜீவ்காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில் அக்கட்சியினர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்.