காரைக்கால் அருகே தனியார் பள்ளியில் 7 மணிநேரம் மண்டியிட வைத்து மாணவருக்கு தண்டனை : ஆசிரியை மீது பெற்றோர் புகார் - போலீசார் விசாரணை
Oct 15 2019 8:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை பள்ளி ஆசிரியை தொடர்ந்து 7 மணிநேரம் மண்டியிட வைத்து தண்டனை கொடுத்துள்ளார்.
திருமலைராயன் பட்டினத்தில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வரும் நவ்யபிரசாத் என்ற அந்த மாணவர் பெற்றோரிடம் ரேங்கார்டில் கையெழுத்து வாங்கவில்லை. இதுகுறித்து வகுப்பாசிரியர் கேட்டுள்ளார். மாணவர் காரணத்தை கூறியும் ஆசிரியை மாலதி எரிச்சலுடன் அந்த மாணவரை கண்ணத்தில் அரைந்தும், கழுத்தில் தாக்கியும் காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணிவரை மண்டியிட வைத்துள்ளார். இயற்கை உபாதைக்கும் அனுமதிக்காமல் மாணவரை சித்ரவதை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் பள்ளி மீது குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது மாணவர் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்நிலையில் தனியார் பள்ளியில் ஒருதலைப்பட்சமாக தனது மகனை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும், பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.